-
எழுச்சியூட்டமே! வீரவணக்கம்!
எத்தனை கொடுமை எத்தனை அவலம் நம்மண்ணிலே
அத்தனையும் அணிவகுத்து முடிவில்லை இன்னும்
இத்தனை துயரங்கண்டும் இரங்காத கொடியவுலகம்
கத்தியும் கதறியும் கேட்பவர் எவருமில்லையோ?
துருப்புச் சீட்டல்ல உன்னுயிர் அது எழுச்சியூட்டம்!
நெருப்பில் வெந்து எம்நெஞ்சினிலே குளிர்நிலவானாய்!
பொருப்பென உயர்ந்தாய்! புகட்டினாய் பலபாடங்கள்
தெருப் பொருள்களல்ல தமிழுயிரென நெருப்பானாயோ?
வெடித்ததே மக்கள் எழுச்சி உந்தன் குறமுல் போல
கொடிகள் தாங்கிய அமைதிப்பேரணி அகிலமெங்குமே
துடித்தன தமிழர் இதயங்கள் தமிழினப் பேரழிப்பாலே
முடிவெடுத்தனரே உறவுகளின் மூச்சினைக் காத்திட
முத்துக்குமாரா! முத்தாக ஒளிர்கிறாய் நம்மனங்களிலே -உன்
சத்தம் கேட்கவில்லையோ உன்னைப் பொசுக்கிய தீயினுக்கே
நித்தம் ஈழத்தமிழர் படுந்துன்பம் கண்டே கொதிப்படைந்து
செத்து மடியவில்லை நீ! சுடரொளியானாய் தமிழீழவானிலே
முத்துக்குமாரா! முதுபெருஞ் சிந்தனையாளா! ஊடகச்செம்மலே!
புத்துயிர் பெற்றுவிட்டாய் தீக்குளத்திற் குளித்த பின்னே
ஈழத்தமிழர் மனங்களிலே புகழுடம்பாற் பதியமானாய்!
ஈழத்தமிழன்னையின் இன்னுமொரு குமாரா! சகோதரா!
ஒளவை
0 கருத்துரைகள்: